Thursday 8 May 2014

ஊருக்கொரு பள்ளிகட்டி, பிள்ளைகளின் வயிற்றுக்கு சோறும்போட்டு கல்விக்கண் திறந்த காமராஜரும்;

பள்ளிப்பிள்ளைகளை கடத்தி கழுத்தில் சயனைடு குப்பி கட்டி போருக்கு அனுப்பிய பிரபாகரனும் ஒன்றா?!?!?!

அறுபடவேண்டிய தொப்புள் கொடியும்!
விடுபடவேண்டிய தமிழக அரசியலும்!!

முதல்பகுதி

நாடோடி

இந்த தொடரை எழுதவேண்டும் என்று பலமாதங்களுக்கு முன்பே நாடோடி நினைத்து அறிவித்திருந்தாலும் அதற்கான உரிய தரவுகளைத் தேடவும் இதை கோர்வையாக எழுதவும் போதுமான நேரமின்மையால் இது தொடர்ந்து தள்ளிப்போனது. இப்போதும்கூட நிலைமை அதுவே. ஆனாலும் இதை அவசரகதியில் மேம்போக்காகவேனும் எழுதவேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

காரணம் நாடோடி நீண்டநாட்களாக அச்சப்பட்டபடி "பிரபாகரணீயம்" என்கிற மோசமான புற்றுநோய் பெரியாரியம் என்கிற இருப்பவற்றிலேயே மிகச்சிறந்த சமூக/அரசியல் மருத்துவத்தால் பராமரிக்கப்பட்டுவரும் தமிழக அரசியல் என்னும் ஆரோக்கியமான உடலை மோசமாக பாதிக்கத் துவங்கியிருப்பதன் அபாய அறிகுறிகள் தெளிவாகத் தென்படத்துவங்கியுள்ளன. இனிமேலும் இந்த பேராபத்தை உரியமுறையில் சொல்லி எச்சரிக்காமல் இருப்பது தவறு என்றே படுகிறது. அதனாலேயே இந்த தொடரை கிடைக்கும் நேரத்தில் கோர்வையாக இல்லாவிட்டாலும் முன்பின்னாகவாவது பதிவு செய்வது அவசர அவசிய செயலாகப்படுகிறது.

நாடோடியைப்பற்றி தெரியாதவரகளுக்கு கூடுதல் தன்னிலை விளக்கமாக, இந்த கட்டுரைத்தொடர் எழுதும் நாடோடிக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திமுகவில் யார் சொல்லியும் இந்த தொடர் எழுதப்படவும் இல்லை. திமுகவில் யார் சொன்னாலும் இந்த தொடர் நிற்காது. இதில் நாடோடியின் நிலைப்பாடும் மாறாது. ஏனென்றால் இந்த தொடரின் நோக்கம் திமுகவை காப்பதோ, புலிகளின் பிம்பத்தை உடைப்பதோ அல்ல. பிரபாகரணீயம் என்கிற அரசியல் புற்றுநோயை தமிழ்நாட்டு அரசியலில் இருந்து அகற்றுவது. அந்த கட்டியும் நம் உடலில் வளர்ந்த நம் உடலின் பகுதி தானே என்று பாசம் பாராட்டியதும் போதும். அதனால் 7 கோடி தமிழ்நாட்டுத்தமிழர் பட்டதும் போதும்.

அதேபோல கண்டிப்பாக இது திமுக ஆதரவுக்கட்டுரைத்தொடரல்ல. திமுகவின் தவறுகளும் இதில் சுட்டிக்காட்டப்படும். அது சுயவிமர்சனம். காரணம் திமுகவைப்போலவே, நாடோடியும் புலிகளை கடந்தகாலத்தில் ஆதரித்த நபரே. அதை சொல்வதில் எந்த கூச்சமும் இல்லை.

அடுத்து இது விடுதலைப்புலிகள் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதிர்ப்புத்தொடரும் அல்ல. மாறாக, ஈழத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்னெடுத்த ஆயுதவழியிலான ஈழத்தமிழர் விடுதலை அரசியல் என்பது மிக மோசமாக தோற்றுப்போனதற்கு யார் காரணம் என்பது குறித்தும், அந்த தோல்வியில் இருந்து தமிழ்நாட்டுத் தமிழர் கற்கவேண்டிய அடிப்படை அரசியல் பாடங்கள் எதையுமே கற்காமல், ஈழத்தில் மிகமோசமாக தோற்றுப்போன, குறைந்த பட்சம் இரண்டு லட்சம் தமிழர்கள் அநியாயமாக கோரமாக கொல்லப்படக்காரணமாக இருந்த பிரபாகரன் பிராண்ட் தமிழ்த்தேசிய அரசியலை தமிழ்நாட்டு அரசியலில் முன்னெடுப்பதில் இருக்கும் பன்முக ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிப்பதே இந்த கட்டுரைத்தொடரின் முதன்மையான நோக்கம்.

அதிலும் குறிப்பாக, திராவிட இயக்கம் புத்திசாலித்தனமாக சுமார் நூறாண்டுகாலம் போராடி வெற்றி பெற்று சாதித்துக்காட்டியிருக்கும் தமிழ்நாட்டு அரசியலில், ஈழத்தமிழரின் ஒட்டுமொத்த தோல்வியின் சின்னமான பிரபாகரனை கொண்டுவந்து முன்னிறுத்த முயலும் செயலானது, ஆரோக்கியமாக ஆயிரம் கிளைபரப்பி, நூற்றுக்கணக்கான விழுதுவிட்டு ஆழமாக வேரூன்றி பரந்து விரிந்து நிற்கும் மிகப்பெரிய ஆலமரத்தின் ஆணிவேருக்குள், ஆலகால விஷத்தை கொண்டுவந்து பலவந்தமாக புகுத்தும் செயல் என்பதை எச்சரிப்பதே இந்த தொடரின் நோக்கம்.

முதலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை தமிழ்நாட்டின் தற்கால பெரியாரியவாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? எந்த அளவுக்கு போற்றுகிறார்கள்? என்பதை கொஞ்சம் பார்ப்போம்.

நாடோடி பெரிதும் மதிக்கும் முகநூல் நண்பர் திராவிடப் புரட்சி. (அவருக்கும் நாடோடிக்கும் முகநூல் நட்பு மட்டுமே. நாடோடி யாரென அவருக்கும் தெரியாது. அவர் யாரென நாடோடிக்கும் தெரியாது. இருவரின் சுய அடையாளங்கள் இங்கே தேவையும் இல்லை) பெரியாரியம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு ஆழமான பெரியாரியவாதி. பேசுவதை சொந்த வாழ்விலும் கடைபிடிக்கும் நேர்மையாளர் என்பதை அவரது முகநூல் பதிவுகள் சொல்கின்றன. பிரபாகரன் குறித்த அவரது முகநூல் பதிவு கீழே.

திராவிட புரட்சி: "காமராஜர் படத்தை வைத்துக்கொண்டு, கலைஞரை திட்டும் காங்கிரசாருக்கு பதிலடி தருவதற்காக...

அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு, கலைஞரை திட்டும் செ.கு.தமிழரசனுக்கு பதிலடி தருவதற்காக....

நாம் காமராஜரையும் அம்பேத்கரையும் திட்டுவது எப்படி நியாயமன்றோ....

அதுபோலத்தான்....

பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு கலைஞரை திட்டும் முட்டாள்களுக்கு பதிலடி தருவதற்காக...

பிரபாகரனை திட்டுவதும்!

திராவிடப்புரட்சியின் இந்த முகநூல் நிலைத்தகவலைப் படித்ததும் உண்மையில் நாடோடிக்கு கோபம் வரவில்லை. ஆற்றமாட்டாத வேதனை ஏற்பட்டது. அத்தோடு ஒருவித ஆயாசமும் சேர்ந்தே ஏற்பட்டது. பகுத்தறிவுப்பாசறையின் இளம் தலைமுறை அறிவுஜீவிகளின் பிரபாகர பக்தி, அவர்களின் "பகுத்து அறியும் திறனை" இப்படி சிதைத்து சின்னாபின்னமாக்கி வைத்திருக்கிறதே என்கிற சொந்தவீட்டுக்கவலையும் சேர்ந்து நாடோடியை நடுங்க வைத்திருக்கிறது என்பதே உண்மை.

திராவிடப்புரட்சி ஒருவர் என்றல்ல, லக்கிலுக் யுவா, பிரகாஷ் ஜே பி என்று இன்னும் பலப்பல திக, திமுகவினரும் ஏறக்குறைய இதேரீதியிலான முகநூல் பதிவுகளை பதிந்திருந்தனர். எல்லோரின் வாதமும் ஏறக்குறைய ஒன்றே. பிரபாகரனை விமர்சிக்காதீர்கள். அவர் நல்லவர். வல்லவர். மாவீரர். அவர் பெயரை வைத்து அரசியல் செய்பவர்கள் தான் கெட்டவர்களே தவிர பிரபாகரன் கெட்டவரல்ல. தயவுசெய்து பிரபாகரனை விமர்சிக்காதீர்கள். இதுதான் இவர்கள் அனைவரின் பொதுவான வாதம். வேண்டுகோள்.

நாடோடியின் நிலைப்பாடு இந்த பார்வையின் நேர் எதிர் முனை. ஈழத்தமிழர் பிரச்சனை என்பது இடியாப்பச் சிக்கலானதற்கும்;

ஈழத்தமிழர்கள் இரண்டு லட்சம் பேருக்கும் மேலாக மிகக்கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டதற்கும்;

இன்று ஈழத்தில் எஞ்சி நிற்கும் தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முட்டுச்சந்தில் திக்குத்தெரியாமல் நிற்பதற்கும்

அவர்களில் சுமார் ஒரு லட்சம் இளம் பெண்கள் வாழ்விழந்து, உடல் உறுப்புக்கள் இழந்து விதவைகளாகவும், உடல் ஊனமுற்றவர்களாகவும் கிடந்து வாழ வழியின்றி உழல்வதற்கும் முழுமுதற்காரணம் பிரபாகரன்.

முழுக்க முழுக்க பிரபாகரன் நன்கு திட்டமிட்டு உருவாக்கிய ஒரு பிரச்சனையை, பிரபாகரனால் உருவான சிக்கலைப்பற்றி அலசும்போது பிரபாகரனைப்பற்றி பேசாமல் எப்படி பேசுவது?

நேருக்கு நேர் நின்று போர்புரிந்த நேர்மையான எதிரி வாலியை மரத்தில் மறைந்து நின்று கேவலமாகக் கொன்ற; நிறைமாத கர்ப்பிணியான சீதையை காட்டுக்கனுப்பிய, சமஸ்கிரதம் கற்ற சம்பூகன் என்கிற தலித்தை சிரமறுத்த ராமனைப்பற்றி பேசாமல் ராமாயணத்தைப் பற்றிமட்டும் பேசுங்கள், விமர்சியுங்கள், தயவு செய்து ராமனை தொடாமல், ராமனை விமர்சிக்காமல் ராமாயணத்தைப் பற்றி பேசுங்கள் என்பது எவ்வளவு அறிவுக்கு பொருந்தா வாதமோ அதே அளவு அறிவுக்கு பொருந்தா வாதமே இவர்களின் பிரபாகரனை விமர்சிக்காமல் ஈழப்பிரச்சனை பற்றி பேசுங்கள் என்னும் வாதம்.

இராமாயணத்தைப்பற்றிய பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிடர் இயக்கத்தவர்களின் விமர்சனம் ராமனைத்தொட்டதா? ராமனைத்தொடாமல் ராமாயணத்தை மட்டும் விமர்சித்ததா?

இவர்களின் இந்த வாதத்தின் அடிப்படையின் ஆணிவேர் 1980களில் ஆரம்பிக்கிறது. நாடோடியின் தனிப்பட்ட பார்வையில் திராவிடர் இயக்கமும் அதன் அரசியல் தலைமைகளும் அறிவுஜீவிகளும் செய்த மிகப்பெரிய வரலாற்றுத்தவறு "தமிழர் ஒற்றுமை, விடுதலை" என்கிற பெயரில் பிரபாகரனையும், அவரது விடுதலைப்புலிகளையும் கொண்டுவந்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் பரப்பியது. ஆரம்பத்தில் பிரபாகரனையும் புலிகளையும் கொண்டாடி பாமரனிடம் கொண்டு சேர்த்தது திகவும் திமுகவும். அதுவும் இவர்கள் எல்லோருமே தம் சொந்தக்காசில் இந்த பொதுச்சேவையை செய்தார்கள் என்பது 2009க்குப்பிறகு ஈழத்துக்காக காசு வாங்கிக்கொண்டு "களமாட" கிளம்பியிருக்கும் இளம் தலைமுறையினருக்குத் தெரியாது.

வீணாய்ப்போன விடுதலைப்புலிகளுக்காக கொளத்தூர் மணி, பேரறிவாளனைப் பெற்றதாய் அற்புதம் அம்மாள் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பம், சுபா சந்திரன் போன்ற தமிழ்நாட்டு ஊடக புகைப்படத்துறையின் முடி சூடா மன்னன், ஏதுமறியா ஏழை அப்பாவியான இளம் தலைமுறை புகைப்படக்கலைஞன் ஹரிபாபு, ராஜீவ் கொலை நடந்த பின்னர் ஒரு வாரகாலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டளவில் அடி உதைபட்டு குடியிருந்த வீடு, பயிர்செய்த வயல்கள், லாரிகள், டிராக்டர்கள், அலுவலகங்கள் எல்லாம் எரிந்து நடுத்தெருவில் நின்ற லட்சக்கணக்கான திமுக தொண்டர்களின் இழப்புக்களையெல்லாம் கணக்கு போட்டோமானால், எத்தனை கோடிகள் இழப்பு வரும் என்று யாருக்காவது தெரியுமா? இவர்கள் எல்லாம் புலிகளுக்காக இழந்த சொந்த வாழ்வு, சொத்துக்கணக்கு, இழந்த நேரம் இவற்றை கணக்கிட்டு இழப்பீடு கொடுக்கத்தான் முடியுமா? இவர்கள் எல்லாம் எதற்காக இத்தனை இழப்புக்களை சந்தித்தார்கள்? இவர்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் என்னதான் தொடர்பு? அந்த தொடர்பை ஏற்படுத்தியவர்கள் யார்?

வேறு யார். திராவிடர் இயக்க அரசியல், இலக்கிய, அறிவுஜீவிகள் தான் அந்த தொடர்பை ஏற்படுத்தியவர்கள். என்ன சொல்லி அதை செய்தார்கள்? முதலில் பெரியாரின் பேரன் பிரபாகரன் என்று துவங்கிய திராவிடர் இயக்க ஆளுமைகளின் பிரபாகர துதிபாடல், இன்று பெரியாரைவிட பிரபாகரன் பெரிய ஆள் என்பதாக பரிணமித்திருக்கிறது அல்லது தமிழக இளைஞர்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை உறைக்கும் விதத்தில் சொல்லி உறைக்கவைப்பதே இந்த தொடரின் நோக்கம்.

பார்ப்பண ஆதிக்கத்தை எதிர்த்து உருவான திராவிடர் இயக்க வழிவந்த அரசியல் கட்சியான அதிமுகவின் தலைமைப்பதவிக்கு வந்த ஜெயலலிதா தேர்தலில் வென்று தமிழக முதல்வரான பின்னர், தமிழக சட்டமன்றத்தில் ஒருமுறை இப்படி அறிவித்துக்கொண்டார். "நான் பாப்பாத்தி தான். அதேசமயம் நான் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியின் நவீன வடிவம்".

ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பில் வெளிப்பட்டது அவரது பிறவிக்குணமான பார்ப்பண ஆணவம் என்றால் திராவிடபுரட்சியின் மேற்கண்ட நிலைத்தகவலில் வெளிப்படுவது பெரியாரியப்பார்வை அல்ல; போற்றத்தக்க, ஏற்கத்தக்க தர்க்க வாதமோ, நிறுவக்கூடிய நியாயமோ அல்ல. பிரபாகரன் மீதான கண்மூடித்தனமான பக்தி. என்ன இருந்தாலும் பிரபாகரன் "நம்ம ஆள்" என்கிற நல்லெண்ணம். 25 ஆண்டுகாலம் நாமே வளர்த்த பிரபாகரனின் பேருருவை நம் கண் முன்னே நாமே அழிக்கலாமா அல்லது அழிக்க அனுமதிக்கலாமா என்கிற பொதுநலன் சார்ந்த பதற்றம். பதற்றம் என்றுமே நியாயத்திற்கு எதிரி. அதுவே திராவிடப்புரட்சியின் இந்த நிலைத்தகவல் மீண்டும் ஒருமுறை நமக்கு நிரூபித்திருக்கிறது.

அதனால் தான் பழுத்த பெரியாரியவாதியான அவர், கொலையை மட்டுமே தனது ஒரே அரசியல் ஆயுதமாக கொண்டு செயற்பட்ட பிரபாகரனை கொண்டுவந்து, கொலை செய்யாமல் அரசியல் செய்வதை மட்டுமே தமது வாழ்நாள் லட்சியமாக கொண்டு செயற்பட்டு வெற்றிபெற்ற ஒப்பிடவே முடியாத இந்திய/தமிழக அரசியல் ஆளுமைகளுடன் அநாயாசமாக பிரபாகரனை ஒப்பிட்டு நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

காந்தி, நேரு, அம்பேட்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி இவர்களின் தலைமையிலான அரசியல் எழுச்சி, அணிதிரட்டல், பொதுமக்கள் போராட்டங்கள், நிர்வாக அணுகுமுறைகள் உள்ளிட்ட எல்லா செயற்பாடுகளிலும் இருந்த பொதுத்தன்மை என்பது தமது செயற்பாடுகள் எதுவானாலும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மிகக் குறைவாகவும், நன்மைகள் அதிகமாகவும் இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். அதன் அடிப்படையிலேயே அவர்கள் திட்டம்போட்டார்கள். செயல்பட்டார்கள். சாதித்தார்கள்.

இதில் பிரபாகரன் அணுகுமுறை நேர் எதிரானது. அவருக்கு தமிழ் மக்கள் என்றுமே ஒரு பொருட்டல்ல. தனது இறுதி இலக்கை அடைய அவர் பயன்படுத்திய பல ஆயுதங்களைப்போலவே மக்களும் அவரது போராட்ட ஆயுதங்களில் ஒன்று. ஆரம்பம் முதலே அவரது அணுகுமுறை அதுவே. அதனால் விளைந்ததே இத்தனை இழப்பும்.

அப்படி சக மனிதர்களை அவர் வெறும் போர்க்கள ஆயுதங்களாக மட்டுமே பார்த்ததன் விளைவுதான் அவர் ஊரான் வீட்டு பிள்ளைகளை அந்த பெற்றோருக்கு தெரியாமல், அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக பள்ளிகளில் சென்று பிடித்துக்கொண்டுபோய் அவர்களின் கழுத்தில் பலவந்தமாக சயனைடு குப்பி கட்டி, கையில் துப்பாக்கி கொடுத்து போர்க்களத்துக்கு அனுப்பினார். இதில் அவருக்கு எந்தவிதமான உறுத்தலும் இருந்தது இல்லை. இருந்ததாக சொல்வதெல்லாம் பச்சைப்பொய் என்பதற்கு இறுதிப்போரில் இரண்டுலட்சம் தமிழர்களை மனிதக்கேடயமாக பிடித்து வைத்த பிரபாகரனின் குரூரமே நிதர்சன சாட்சி.

அதுவும் பிரபாகரனின் சொந்தப்பிள்ளைகள் எல்லோரும் போரின் இறுதிவரை உயிருடன் இருந்தார்கள் என்பது மட்டுமல்ல, வன்னிப்பகுதியில் புலிகள் "ஆட்சி" (?) செய்தபோது அங்கே இருந்த மற்ற தமிழ்க்குழந்தைகளைவிட மிக மிக வசதியாக, சொகுசாக, அதிகபட்ச பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள் என்பது நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆனால் திராவிடப்புரட்சி பிரபாகரனுடன் ஒப்பிட்டிருக்கும் காமராஜரின் கதை என்ன? தனக்கென சொந்தக் குழந்தையில்லாதவர் காமராஜர். ஆனால் ஊரான் வீட்டுப்பிள்ளைகளையெல்லாம் தன் பிள்ளையாக நினைத்த உன்னத மனிதன் அவர். அந்த உத்தமரின் உன்னதத்தை வர்ணிக்க வார்த்தைகள் உண்டா? ஊரில் இருக்கும் குழந்தைகள் படிக்க என்ன செய்யலாம் என்று ஓயாமல் சிந்தித்த பெருந்தகையாளன் அவர். அந்த சிந்தனையின் விளைவு அவர் ஊருக்கொரு பள்ளியைத்திறந்தார்.

அதன் விளைவாக வயிற்றில் உணவில்லாமல் மூளைக்கு உணவு ஏறாது என்பதை நேரில் கண்டார்.
விளைவு திராவிடர் இயக்க ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிப்பிள்ளைகளுக்கான மதிய உணவு திட்டம் மாநிலம் தழுவிய மதிய உணவு திட்டமாக அரசு பள்ளிகளில் விரிவு படுத்தப்பட்டது.

அதன் பயன் தானே இன்று தமிழ்நாட்டு சூத்திரப்பிள்ளைகள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று இன்று உலகமெல்லாம் பெருமைக்குரிய பின்னணியுடன் சாதனை படைத்துவருகிறார்கள்?

மதிய உணவு கொடுத்து படிக்கவைத்து உலகை வெல்லவல்லவனாக தமிழ்நாட்டு சூத்திரப்பிள்ளைகளை உருவாக்கிய காமராஜர் என்கிற கல்வி வள்ளலைக்கொண்டுபோய், படிப்பை கெடுத்து, போர்க்களத்துக்கு அனுப்பி ஒன்று நேரடியாக மேலோகம் இல்லாவிட்டால் அங்க ஈனத்துடன் அகதி என்கிற பெயரில் வெளிநாடு என்று அனுப்பிய அராஜக அரசியல்வாதியை ஒப்பிடுகிறார் நண்பர் திராவிடப்புரட்சி.

இந்த விபரீதத்தை என்ன சொல்லி விமர்சிக்க? ஆனால் விமர்சித்துத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. யாருக்கு எங்கே வலித்தாலும் இந்த விமர்சனம் காலத்தின் கட்டாயம்.
காரணம் நோயுற்றிருப்பது தமிழக அரசியல் என்கிற நம் சொந்த உடம்பு.
அதற்கான சிகிச்சையை நாம் தான் எடுத்துக்கொள்ளவேண்டும். சிகிச்சை என்றாலே கசப்பு மருந்தும் சேர்ந்தே இருக்கும். ஆனால் நோயை விரட்டவேண்டுமானால் கசப்பு மருந்து அடங்கிய சிகிச்சையை ஏற்பதைத்தவிர உடம்புக்கு வேறு வழியில்லை. விருப்பம் இருப்பவர்கள் தொடருங்கள்.

சிகிச்சை தொடரும்.....---ethiroli thamil ...!


Saturday 31 August 2013

வியாசர்பாடியில் அந்த ஒரு இரவு:
எங்கேயோ  கேட்கும் நாயின் கோரமான சத்தமும்  , நிசப்தமான இரவு நேரத்தில் கேட்கும் ஒரு பெண்ணின் அழுகுரலும் , நம்மை யாரோ பின் தொடர்கிறார்களோ என்று நினைக்க தோணும் தனிமையான இரவு நடைபயணங்களும் , "அந்த ஒரு இரவை " எனக்கு நினைவில் கொண்டுவராமல் இருந்ததில்லை ...!

அது நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் நேரம் .. ,  இரண்டாம் ஆண்டின் தேர்வு முடிவுகள் இன்றோ, நாளையோ வரப்போகிறது என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம்...!
அப்போது என் கணக்கில் 6 அரியர்கள்  இருந்தது ..தேர்வு முடிவுகள் வந்ததும் இன்னும் எத்தனை என் கணக்கில் ஏறப்போகிறதோ என்று வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்த நேரம் ...

என் நண்பர்கள்  சரவணன், சபரி , ஷமீர்-னு ஒரு 12 பேர் கொண்ட   ஒரு கூட்டம் இருந்தது ...அந்த கூட்டத்தில் அனைத்துமே நீர்ப்பறவைகள் , என்னையும் சேர்த்து ஒரு இரண்டு பேர் சரக்கு அடிக்க மாட்டோம் , ஆனாலும் புகைவண்டிகளாக இருந்தோம் ..அவர்கள் சரக்கு அடிக்கும் நேரம் நாங்கள் மூவரும் தின்பண்டங்களை தின்று  கொண்டு , புகையை விட்டுக்கொண்டு இருப்போம் .".சரக்கு அடிக்குரவங்க சில பேரு  தம்  அடிக்க மாட்டாங்க ,,ஆனால் தம் அடிக்குரவங்க  எல்லாருமே சரக்கு அடிப்பாங்க என்று ஒரு பேக்டு உண்டு ..நாங்கள் அதை உடைத்து தூள் தூளாக்கியவர்கள்  ..!

எங்கள் கூட்டத்தில் எனக்கும் , சரவணனுக்கும் முதலாம் ஆண்டிலிருந்தே ஒரு போட்டி உண்டு... எனக்கு 2 இருக்கும்போது அவனுக்கு 4 .., எனக்கு 6 இருக்கும்போது  அவனுக்கு 5.., எனக்கு 8 இருக்கும்போது அவனுக்கு 6 .., அரியர் என்னிக்கையதான் சொல்றேன் ..எனவே இன்னிக்கு தேர்வு முடிவு வந்தால் யாருக்கு அதிகமான அரியர் , மொத்த எண்ணிக்கையில் நான் குறைவேனா , அவன் குறைவானா என்று எங்களுக்குள் ஒரு பனிப்போர் மூண்டு கொண்டிருந்தது ..

விடுதியில் எனது அறையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது , வியாசர்பாடியை சேர்ந்த நண்பன் ரமேஷின் போன் வந்தது , எதிர்முனையில் " மச்சா , வீட்ல எல்லாரும் பக்கத்து ஊரு கோவில் திருவிழாக்கு போய்ட்டாங்க ...கைல காசு இருந்தா 4 புல்லு வாங்கிட்டு உடனே எல்லாரும் வந்துடுங்க ..நான் காச தந்தரேன் ..இன்னிக்கு என் ட்ரீட் ..." என்று கூறினான் ..! சனிக்கிழமை 9 மணிக்கு போன கரென்ட் 5 மணிக்கு வந்த எப்டி இருக்குமோ அப்டி இருந்துச்சு ...! அப்போது மணி சரியாக மாலை 6 மணி ..இரவு படர்ந்து கொண்டிருந்தது ..சரக்கு வாங்கிக்கொண்டு  கிண்டியில் இருந்து வியாசர்பாடியை நோக்கி கிளம்பினோம் ..சரவணன் மட்டும் வரவில்லை , அவன் சொந்த ஊர் கள்ளகுறிச்சி என்பதால் வார வாரம் அங்கு  சென்றுவிடுவான் ..! இருசக்கர வாகனத்தில் சென்றோம் .

வியாசர்பாடி வடசென்னையின் பேட்டை என்றும் ,அது பிரபல ரௌடிகளின் புகலிடம் என்றும் ,வாய் வழி செய்தியாக நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ..,
சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரில் உள்ள ஒரு பாலத்தில் நின்றுகொண்டு ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் , வியாசர்பாடி எப்படி செல்வது என்று கேட்டோம் ..
அந்த ஓட்டுனர் சென்ட்ரல் ஸ்டேசனின் வலது மற்றும் இடது புறத்தில் உள்ள இரு சாலைகளை காட்டி இந்த இரண்டு வழியாகவும் செல்லலாம் என்று கூறினார் ..ஆட்டோ-வின் உள்ளே இருந்து ஒரு வெண்கலக்குரல் எட்டிப்பார்த்தது .., " கண்ணு மணி 8 ஆகிடுச்சு , இந்த வழியாக போக வேண்டாம் " என்று இடது பக்க வழியை காட்டிய ..அந்த நடுத்தர வயதை ஒட்டிய திருநங்கை அம்மாவின்  முகத்தில் ஒரு கனிவை கண்டேன் .., பெரும்பாலும் திருநங்கைகளை கண்டு அஞ்சும் நான் , அந்த கனிவான அம்மாவை பார்த்து புன்னகைத்தேன் ..!
ஆனாலும் அப்படி அந்த பாதையில் என்னதான் இருக்கிறது என்று  பயம் கவ்விக்கொண்டது ..

அந்த பாதையின் முடிவில் இரண்டு பாதைகள் பிரிந்தது ...அதில் எதில் திரும்புவது என்று ரமேஷிடம் போன் பண்ணி கேட்டோம் ..அவன் சொன்னவாறு திரும்பிவிட்டு , எதுக்கும் உறுதி செய்வதற்காக ஒரு பெரியவரிடம் " அய்யா . லட்சுமி நகர் இப்டியா போகணும் " என்று வினவினோம் ..அவர் " ஆமா தம்பி இப்டிதா போகணும் . ஏன் இந்நேரத்துல அங்க போறீங்க , நேத்து அங்க ஒரு ஆள மட்டர் பன்னிட்டானுங்க " என்று கூறினார் .. மேலும் அல்லு கெளம்பியது .. எனினும் இன்று சரக்கு ரமேஷ் வீட்டில் அடித்தே ஆகவேண்டும் என்று தொடர்ந்தோம் ..!

இறுதியாக வியாசர்பாடி லட்சுமி நகரை அடைந்தோம் ..மணி 8.30 இருக்கும் , ஆனால் தெரு விளக்குகள் எரியாமல் பேரிருள் சூழ்ந்திருந்தது .,கூட்டம் கூட்டமாக இளசுகளும் , பெருசுகளும் பேசிக்கொண்டிருந்தார்கள் .. எங்களை வித்தியாசமாக பார்த்தனர் ..ரமேஷ் வந்து எங்களை அவன் வீட்டுக்கு அழைத்து சென்றான் ..

வீட்டை அடைந்ததும்  ரமேஷ் எங்களை நோக்கி  " மச்சான் , அமைதியா உள்ளே வாங்கடா.. வண்டிய அங்க நிறுத்துங்க ... சத்தம் போட்டு பேசாதீங்க , நேத்து அங்க ஒரு மட்டர் ஆயிடுச்சுடா , " என்று தன் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளியிருந்த ஒரு வீட்டை நோக்கி கை காட்டினான் .., அங்கு பார்த்துக்கொண்டே  நுழைந்தோம்  

பிளாஸ்டிக் க்ளாஸ்களில் முறையே சரக்கை சரியான அளவில் ஊற்றி , பெப்சி-யை சரியான விகிதத்தில் கலந்து , சியர்ஸ் என்ற உற்சாக வார்த்தையுடன்  மது அருந்த தொடங்கினார்கள் ., மூன்றாவது  ரவுண்டு போய்க்கொண்டிருந்தது .., நாங்கள் மூவரும் சிகரெட்டை எடுத்து பற்றவைக்க தயாரானோம் ..., ஒரு பெரும் அலறல் சத்தம் எங்களுக்கு மிக அருகில் கேட்டது ..அது கண்டிப்பாக மனிதனின் அலறல் சத்தம் போல் இல்லை ..ஆனால் அது மிருகத்தின் சத்தம் போலும் இல்லை ..,சிகரெட்டை பற்றாமல் நாங்கள் பெருமூச்சு வாங்கியவாறு , ஒருவரை ஒருவர் பார்தோம் ..மணி 11.30 இருக்கும் ..போதையில் இருந்த நண்பர்கள் அந்த  சத்தத்தை பெரிதாக கவனிக்கவில்லை..நாங்கள் மூவரும் அறையை விட்டு வெளியே வந்து வீட்டின் கதவை  திறந்து  வெளியே பார்த்தோம் ...............

எனக்கு சிறு வயதில் இருந்தே அமானுஷ்ய சக்திகளின் மீது அதிகமான ஆர்வமும் , அதைவிட அதிகமான பயமும் உண்டு,., அதற்கு என் பாட்டியை கூட ஒரு காரணமாக சொல்லலாம் .., சிறு வயதில் சாப்பாடு ஊட்டி விடும்போது சரியாக சாப்பிடாவிட்டால் , மாடிப்படியை நோக்கி கை காட்டி "அங்கிட்டு கண்ணு நிக்குது லே .." என்றும் கொல்லையை நோக்கி " அங்கிட்டு கொள்ளிவாய் பிசாசு சுத்துது லே " என்றும் கூறி பயமுறுத்தி சோறை மசிச்சு வாயில் திணிப்பாள் ..அப்போது   தொற்றிக்கொண்டது  எனக்கு பயம் ..,   விடலையாக  வளர்ந்த பின்னர் கூட பின்புற கொல்லைக்கும் , சமயல்கட்டுக்கும் இரவு நேரங்களில் போவதை   தவிர்த்தேன் .., இரவு நேரங்களில் ஒன்னுக்கு முடுத்தாலும் அடக்கிக்கொண்டு காலை வரை பொரண்டு கொண்டிருப்பேன் ..இல்லாட்டி அம்மாவை எழுப்பி கூட்டிக்கொண்டு போவேன் ..பெரிதாக வளர்ந்தாலும் அந்த அச்சம் தொடர்ந்தது .., வெவ்வேறு இடங்களில் நடக்கும் அமானுஷ்ய சக்திகள்ளல் நடக்கும் அசம்பாவிதங்களாக நண்பர்கள் கூறும் கதைகளை நம்பினேன் .பகல்களில் விரும்பி விரும்பி பேய் கதை கேட்பேன் .., இரவில் அஞ்சி துயில் கெடுவேன் ..,

இப்படிப்பட்ட எனக்கு இந்த சத்தம் , அடிவயிற்றில் அடி சாயா போட்டது ...! " மச்சா வாடா வெளில போய் பார்க்கலாம் " என்று   சபரி என் கையை இழுத்தான் ..,நான் பயத்தை கண்களில் காட்டாமல் " ம்ம்ம் ..வாடா பாக்கலாமே " என்றேன்.. என் போனில் குறுஞ்செய்திக்கான சத்தம் வந்தது பீப் என்று ...
                                  
                              mech.saravanan : macha. anna university u.g result may /june 2010 came...(11.50PM)
                                                  me: ennada solra ..? seekkirama parthu solluda ..?(11.51PM)
                              mech.saravanan :in my native net is sema slow...wait da...!(11.55PM)

"மச்சா சபரி , இந்த பயம் போதாது-னு  ரிசல்ட் வேற வந்துடுச்சு டா ..." சரோ இப்பதா மெசேஜ் பன்னாண்டா ...! (கரென்ட் போனது .) (12.00AM)(கும்மிருட்டு )

மீண்டும் அந்த பெரும் சத்தம் முனங்குவது போல் கேட்டது ...! பயத்தில் , " மச்சா , தம் எடுடா ." நான்  சிகரெட்டை பற்றவைக்க , தீப்பட்டியில் குச்சியை உரசி நெருப்பை சிகரெட்டில் வைத்தோம் .., சிகரெட்டின் முன்பகுதி எரியாமல் . வாயில் வைக்கும் "பட் " பகுதி எரிந்தது ..., 
"மச்சா பயத்துல சிகரட்ட கூட தப்பா  பத்தவைக்கிரியேடா""
இன்னும் ரெண்டு தா இருக்கு , ஒழுங்கா பத்த வை -னு " ,  சபரி இன்னொரு சிகரெட்டை தந்தான் ..,
போனில் உள்ள விளக்கை எரியவைத்து . ஒழுங்கான முறையில் வாயில் வைத்து பற்றவைத்தேன் , மீண்டும் பட் பகுதி எரிந்தது ..
கோபத்தில் சபரி , என் தலையில் தட்டி " என்னடா ஒழுங்கா  பத்த வைக்க குட தெரியல "
நான் " மச்சா , நான் ஒழுங்கா தா பத்த வச்சேன் டா. .."எனக்கு செம பயமா இருக்கு டா .. 
சிகரெட்டின் பட் பகுதி எறிந்தால் , அதை மீண்டும் வாயில்  வைத்து  புகைக்க முடியாது , நாற்றம் அடிக்கும் ..இதுதான் சபரியின் கோபத்திற்கு காரணம் ..

மிச்சமிருந்த ஒரு சிகரெட்டை , சபரி பற்றவைத்தான் ,மீண்டும் அவ்வாறே எரிந்தது ..! பயத்தில் மூவரும் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க கதவை மூடிவிட்டு உள்ளே ஓட முயற்சித்தோம் .., கதவை எவ்வளவு இழுத்தும்  மூட முடியவில்லை , யாரோ எங்களை நோக்கி நடந்து வருவது போல் சத்தம் கேட்டது , எதிரே பார்த்தால் ஒரு நிழல்  எங்களை நோக்கி வந்தது . , பயத்தில் "டேய்ய் ய் ய் ய்  , ரமேஷு" என அலறினோம் ....வெளியே வந்த ரமேஷு , "டேய் , இது நேத்திக்கு செத்த குமாரு டா ஆ ஆ ஆ ஆ " என்று அலறியவாறே மயங்கி விழுந்தான் ...10 அடி  தொலைவில் அந்த நிழல் எங்களை நெருங்கி கொண்டே வந்தது ............................ போன் ஒலித்தது ...mech.saravanan callinngggg.......

                  சரவணன் : மச்சா , ரிசல்ட் பார்த்துட்டேன் டா ( சோகமாக )
                            நான்  : ஓ *****  , சொல்லி தொலடா ( கோபத்துடன் )
   நிழல் மிக அருகில் வந்தது .. மற்ற இரண்டு நண்பர்கள் மயங்கினர் .........

                   சரவணன் : எனக்கு  மொத்தமா 14 அரியர் டா   ..........
                             நான் : எனக்.......கு .........?
     நிழல் மிக மிக அருகில் பெரும் சத்தத்துடன் வந்தது .....................
                   சரவணன் : உனக்கு மொத்தம் 4 தாண்டா ... 8 ல இருந்து  4 குறைச்சிருக்க ... கெத்து டா மாப்ளே  .............!!!!!!!!!!!!!!!!
                    நான் ..:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


பெரும் சந்தோஷ கூச்சலுடன்  , எதிரே வந்த ஆவியை நோக்கி ஓடினேன் .....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஆவியை கூட எதிர்க்கும் சக்தி நள்ளிரவில் வரும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுமுடிவுகளுக்கு உண்டு ...!
                                                                               
                                                                                     கா.வாசிம் அகமது


Sunday 25 August 2013

காதல் கடிதங்கள் :

பேப்பர் ராக்கெட் மூலமா நெனச்ச இடத்தை   அடைகிற நுட்பத்தை கைதேர்ந்து பழகிய பின் , சோதனைக்கு தயாரானேன் ...! ஆளில்லா  இடங்களில் தான் பெரும்பாலும் ராக்கெட் சோதனைகள் நடைபெறும் ..மக்களுக்கு  எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக...! என் ராக்கெட் சோதனையும் அப்படி தான் , ...! எனக்கு எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக..!

லாவண்யா ...! நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது , என் பள்ளியில்  இணைந்தாள் ...! ஒரு சிறு சீரக மிட்டாயை மறைக்கும் அளவுக்கு அளவான கன்னக்குழிகள் அவள் சிரிக்கும்போது எட்டிப்பார்க்கும்..!அந்த குழிகளை தொட்டு பார்க்கவேண்டும் என்று எனக்கு தீரா ஆசை...! கூந்தல் பழ  பழ  என்று என்னை தேய்த்து படிகாரம் போல் மின்னும்..! பளிங்கு கற்கள் போல் கூந்தல் அடர்த்தி ..! அந்த கூந்தலின் சிறு பகுதிகளை முகத்தில் விட்டிருப்பாள் , அது அந்த கன்ன குழிகளில் கொஞ்சி விளையாடும்...! என் உள்ளத்தின் முதல் காதல் அந்த கூந்தல் தான் ...!

நான்தான் வகுப்பு காவலன்...! ஆசிரியர் இல்லாத நேரங்களில் வகுப்பில் யாரும் பேசாமல் கட்டி காக்க வேண்டும் ...!என்னை ஒரு கண்டிப்பான அதிகாரி போல் பாவித்துக்கொள்வேன் ...! அதிகமாக பேசும் மாணவர்களின் பெயர்களை , வகுப்பின் கரும்பலகையில் எழுதி , அவர்கள் பேசும் அளவிற்கு ஏற்ப பெருக்கல் குறிகளை அதிகமாக்கி  , வாத்தியாரிடம் போட்டு கொடுக்கும் ஒரு கேவலமான  வேலை...!

அவள் ஒரு வாயாடி .,ஆசிரியர் இல்லாதபோது தன் சிங்கப்பூர்  மாமா வின் புகழ்களையும் . தான் திருப்பதி சென்று வந்த அனுபவங்களையும் , தனது சக தோழிகளிடம் அடுக்க   ஆரம்பித்துவிடுவாள் ...! ஆனால்  அவளுடைய பெயரை மட்டும் நான் குற்றப்பத்திரிக்கையில் எழுதாமல் என்   அன்பை வெளிப்படுத்துவேன்...!குழிகள் குவிய சிரிப்பாள் ...!குதூகலத்தில் மிதப்பேன்..! எனக்கெதிராக வகுப்பு மாணவர்கள் ஒரு புரட்சி படையே தொடங்கினார்கள் ...!

என் பாட்டியின் மடியில் படுத்து பார்க்கும் ஒவ்வொரு படங்களிலும் வரும் காதல் காட்சிகளை அர்த்தமே தெரியாமலும் கூட ரசித்தேன் ..! சில படங்களில்
தன் காதலை கதாநாயகர்கள் காகிதத்தில் எழுதி ராக்கெட் பறக்க விடுவதை மனதில் ஏற்றி சோதனைக்கு தயாரானேன் ..!

பள்ளி முடிந்து வீடு செல்லும் வழியில் , யாரும்  இல்லாத நேரத்தில் ,
சரியான முறையில் ராக்கேட்டை மடித்து , சிறு நடுக்கத்துடன் , கைகளில் முறையே பொருத்தி , அவளை நோக்கி சரியான முறையில் செலுத்தினேன் ..!

உள்ளே நாலைந்து பாட்டு புத்தகங்களின் பாடல் வரிகளும், ஐ லவ் யூ ..என்ற வாசகத்தையும் எழுதியிருந்தேன் , உபயம் :பக்கத்துக்கு வீட்டு அண்ணன்..!

என் தொழில் நுட்பம் தோற்கவில்லை , சீரான வேகத்தில் பறந்த  ராக்கெட் , எனக்கு அவளிடம் மிகவும் பிடித்த கூந்தலை அடைந்து சிக்கிக்கொண்டது..!

ஏதோ அவள் தலையை மோதிவிட்டது என்ற பரபரப்பில் அவள் தன கூந்தலில் சிக்கியதை வேகமாக பிடித்து இழுத்தாள் ...!என்னை நோக்கி திரும்பினாள் ...!............................................................................................................................................................................................................................................................................................................................................... அவளது கூந்தல் , அழகு கூந்தல் , சிக்கிய ராக்கெட்டுடன் தரையில் கிடந்தது ...! என் ஆறாவது அறிவு அது ஒட்டு முடி என்பதை உணர ஆரம்பித்தது ...!..............................................................................................................................................................................ராக்கெட்டை விட வேகமாக ஓடினேன்...!  திருப்பதிக்கு மொட்டை போட்டிருக்கின்றாள் ...! அவளது நம்பிக்கையில் அவள்  வேண்டுதலை நிறைவேற்றிய அவளது கடவுள் , என் கனவில் ஓட்டை போட்டுவிட்டார்...!

                                                                                                            -கா .வாசிம் அகமது

Thursday 8 August 2013

கிராமத்து காதல் பாட்டு :

கிராமத்து   காதல் பாட்டு :

சூரியனும் ஒளிஞ்சிடுச்சு  -வெட்கப்பட்டு ,
உன்னை தொட வந்த தூறலும் நீ குடை விரிச்சதால்-துக்கப்பட்டு ,
வெள்ளமா  சேர்ந்து வந்து உன் கால் தொடவே -கஷ்டப்பட்டு 
நீ துள்ளி துள்ளி  ஓடியதால் தன்னை புதைசிடுச்சு -நஷ்டப்பட்டு ............!

உன் கை இடுக்குல நாணத்தையும் , உன் கால் இடுக்குல நடுக்கத்தையும்  
காமிக்கிறே எனக்காகத்தான் ......!
என் பாதையிலே பக்குவத்தையும் .பார்வையிலே பத்தியத்தையும் 
சேமிக்கிறேன் உனக்காகத்தான் ......!

நீ  கூந்தல் குதிக்க நடக்கயிலே  என் குருதிக்குள்ள சுனாமி ...,
உன்  ஓரக்கண்ணு  பார்வைக்கு நான் ரகசிய பினாமி .....
சந்தைக்கு நீ போகையிலே காய் கனி  எல்லாம் பூவா மாறி  தூவுது ....,
 கடைவீதி   நீயும் போனா வளையல் உன் கைய சேர ஏங்குது ........!

(உன் கை இடுக்குல)

நீ நிலவா பல்லைக்காட்டி சிரிக்குற ..,
நான் ஆழி அலையப்போல கொதிக்கிறேன் ....!
நீ சற்று தலை நிமிர்த்தி என்னைப்பார்த்தால் கூட .....,
நான் வான வேடிக்கையா வெடிக்கிறேன் .....!

நீ காந்த துண்டு ,நான் இரும்பு குண்டு .......,
உன்ன நோக்கி இழுக்குற...........!
நீ கதிர் அருவா  , நான் கம்பங்கதிரு .....
என்ன சறுக்கு சறுக்குனு அறுக்குற........!

நீ கைகாட்டும் திசைய நோக்கி விரைந்து போகும் என் காலு வண்டி ....!
தைரியமா வந்து ஏறிக்கடி காலம் முழுசும் நான் கேரண்டி டி ..........!

(உன் கைஇடுக்குல )

(சூரியனும்) 
                                                                                                          -கா.வாசிம் அகமது 

Saturday 9 March 2013

"காதல் சோறு "

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!

என் பல்லில் சிக்கிய கறி துண்டே ....,
என் தொண்டையில் குத்திய மீன் முள்ளே ...,
என் நாக்கில் கரையும் கற்கண்டே ....,
நான் உன்னை சுற்றும் சிறு வண்டே ...!

என்னை  சுருட்டி அடைக்கிற "ஷவர்மா வா ...,
தட்டி எடுக்குற புரோட்டாவா ....,
என்னை திருப்பி போடுற தோசையா ,,,
உன் மேல எனக்கு ஆசையே ,...!

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!

குத்துற என்னை "தந்தூரியா ...
சுத்துற என்னை க்ரில் சிக்கனா ...
சிதைக்கிற என்ன பொடிமாஸா ...
வறுக்குற  என்னை கருவாடா ....!

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!
                                                                                                                           --நான்தான் 

Friday 1 March 2013

நீராடும்பொழுது

அஞ்சினேன் ., தன்னம்பிக்கை கொண்டேன் , தலை நிமிர்ந்தேன் , போர்குணத்தை அறிந்தேன் , 
என்னைக்கண்டு வியந்து பெருமிதம் அடைந்தேன் , மாவீரனாக உணர்ந்தேன் ....!
#அதிகாலை குளிர்நீரில் நீராடும்பொழுது ,,.....!- கா.வா

ஈழத்தில் ஒரு காதலர்களின் கவிதை :

ஈழத்தில் ஒரு காதலர்களின் கவிதை :
முத்தமிட ஆசைதான், ஆனால் யுத்தத்தின் சத்தத்தில் முத்தம் எதற்கு ....,
ஊடல் செய்ய ஆசைதான் , ஆனால் யுத்தம் முடிந்த பின் கூடலே இருக்காதே ....,
எந்த தந்தைக்கு தன் சந்ததியை ரத்தக்குளத்தில் நீந்தவிட ஆசை உண்டு.....,!
ஆனாலும் உன்னுடன் இணைகிறேன் ,
என் இனத்துக்காக போரிட ஒரு ஆணும், தாய் பாலிட ஒரு பெண்ணும் தேவை என்பதற்காக....!
-கா.வாசிம் அகமது